Tuesday, 27 October 2015

பாட்டி அன்னப்பழம் @ அன்னலட்சுமி

1975 ல் திருநெல்வேலிமாவட்டம் செட்டிகுளத்தில் நாங்களெல்லாம் சின்னப் பள்ளிக்கூடம் என்று அழைக்கிற
பால்வாடி @ பாலர் பள்ளியில் எங்கள் பாட்டி திருமதி அன்னப்பழம் என்கிற அன்னலட்சுமி (படம்:ஆசிரியை திருமதி சூடாமணி அவர்களுக்கு இடப்புறம் அமர்ந்திருப்பவர்) சமையல்காரராக இருந்தார். அந்தக்காலத்தில் இரண்டாம் வகுப்புவரை படித்திருந்த அவர் சிறந்த கதைசொல்லி ஆவார். சுமார் 20 வருடங்களாவது அந்தப் பள்ளியில் வேலை பார்த்திருப்பார் என்று நினைக்கிறேன். சமைப்பதோடு நின்றுவிடாமல் குழந்தைகளுக்குச் கதைகள் சொல்வது, அவர்களைத் தூங்க வைப்பது முதலிய அனைத்து வேலைகளையும் செய்வார். இராமாயணம், மகாபாரதம், விக்ரமாதித்தன் கதைகள், பஞ்சதந்திரக்கதைகள் முதலிய கதைகளையும் வில்லுப்பாட்டுக் கதைகளையும் நன்கு அறிவார். இவரிடம் உண்ணாத, கதைகேளாத 70, 80 களைச்சேர்ந்தவர்கள் மிகக்குறைவாகவே இருப்பர். இரவில் எங்களுக்கும் கதைகள் சொல்வார். வில்லுப்பாட்டு, நாடகம், சினிமா எங்கு நடந்தாலும் என்னையும் தூக்கிக்கொண்டு செல்வார். பெரிய எழுத்துக் கதைப்புத்தகங்கள் சில இவரிடம் எப்போதும் இருக்கும். வாசிப்பதில் அவருக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது.1975 என்பது காமராஜர் காலமான ஆண்டு.அந்தச் சமயத்தில் சுமார் ஒரு வயது எனக்கு இருக்கும். சென்னையில் பாட்டாபிராம் பகுதியில் இருந்த என் குடும்பம் ஊருக்கு இந்தச் சமயத்தில்தான் இடம்பெயர்ந்தது.  பாட்டி சென்னைக்கு வரவில்லை. ஊரில்தான் இருந்தார். இந்தப் புகைப்படம் எடுக்கும் போது எனக்கு ஒரு வயதுக்குள்தான் இருக்கும். ஊரில் இருந்தேனா? அல்லது சென்னையில் இருந்தேனா? என்று தெரியவில்லை. சூடாமணி டீச்சருக்கு என் பாட்டியின் மீது அன்பும் மரியாதையும் உண்டு. என்னுடைய இலக்கிய இலக்கண ஆர்வங்களின் ஊற்றுக்கால் எனது பாட்டியாகவே இருப்பார்.(படம் உதவி: பாலசுந்தரக் கண்ணன்)

1 comment:

  1. படம் தந்த பாலசுந்தரக் கண்ணன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete